28 February 2012

ஒரு ரக்அத் வித்தை 3 ஆக தொழலாமா? மற்றும் ஸஜ்தா ஸஹ்வு எப்போது?


கேள்வி :
1. விதர் தொழுகையில் குனூத் ஓத மறந்து விட்டால்,அதற்காக சஜ்தா சஹ்வு செய்யவேண்டுமா?
2.
அதேபோல்,ஒரு ரக்அத் விதர் என்ற நிய்யத்தில் தொழும் போது,குனூத் ஓத மறந்ததின் காரணத்தால் நான் தொழுகையை முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து தொழுது மூன்றாவது ரகாத்தில் குனூத் ஓதி தொழுகையை முடித்துக் கொள்ளலாமா?


பதில் : தொழுகையில் ஏற்படும் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும். பின்வரும் காரணங்களுக்காக மட்டும்தான் நபியவர்கள் ஸஜ்தா ஸஹ்வு செய்துள்ளார்கள். இவை தவிர மற்ற காரணங்களுக்கு ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியதில்லை.

முதல் இருப்பை விட்டு விட்டால்....

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போதுஉட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) நூல்கள்: புகாரீ 829, முஸ்லிம் 885

ரக்அத்தை அதிகமாக்கினால்....

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்துகள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் 'தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள்.'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்என்று ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)    நூல்: புகாரீ 1226

ரக்அத்தைக் குறைத்து விட்டால்....

நபி (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒரு தொழுகையை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக் கொண்டார்கள். தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசரக்காரர்கள் பள்ளியில் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு 'தொழுகை குறைக்கப்பட்டு விட்டதுஎன்று பேசிக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி)உமர் (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர் இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர், 'அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா?அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?' என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரி தானா?' என்று கேட்கமக்கள் ஆம் என்றனர். தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 482

ரக்அத் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால்...

தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமாஅல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகம் ஏற்பட்டால் குறைந்ததைஅதாவது மூன்று தான் தொழுதுள்ளோம் என்று கணக்கிட்டு மேலும் ஒரு ரக்அத் தொழ வேண்டும். மேலும் இதற்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
'உங்களில் ஒருவருக்குமூன்று ரக்அத்கள் தொழுதோமாஅல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா?' என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டுஉறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டுஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)       நூல்: முஸ்லிம் 990
'உங்களில் ஒருவர் தொழும் போது ஷைத்தான் அவரிடம் வந்து எத்தனை தொழுதார் என்பதை அறியாத அளவிற்கு அவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். இந்த நிலையை ஒருவர் அடைந்தால் உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)             நூல்: திர்மிதீ 363 புகாரீ 401
நான்கு ரக்அத் தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்துகளும் தொழுது விட்டோமா என்று ஒருவருக்குச் சந்தேகப்பட்டால் அவர் மூன்று ரக்அத்கள் தொழுததாக எடுத்துக் கொண்டுநான்காம் ரக்அத்தை நிறைவு செய்ய வேண்டும். நான்காம் ரக்அத்தின் இறுதியில் ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் 'அல்லாஹு அக்பர்என்று கூறி இரண்டு தடவை ஸஜ்தாச் செய்ய வேண்டும். அல்லது ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யலாம். மறதிக்காகச் செய்யும் ஸஜ்தாவில் ஓதுவதற்கென குறிப்பிட்ட துஆ எதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. எனவே ஸஜ்தாக்களில் எப்போதும் ஓதும் துஆக்களை ஓத வேண்டும்.  
எனவே வித்ரில் குனூத் ஓதாவிட்டால் அதற்காக ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியதில்லை.
மேலும் குனூத் ஓதுவதற்காக ஒரு ரக்அத்தை மூன்றாகத் தொழ வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் நீங்கள் ஒரு ரக்அத் தொழும் எண்ணத்தில் தக்பீர் கட்டிய பிறகு மூன்றாகத் தொழ நாடினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவற்றில் நம்முடைய நிய்யத்தை மாற்றிக் கொள்வதில் தவறில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.
அறிவிப்பவர் :  அபூகத்தாதா (ரலி)  நூல் : புகாரி (712)
நீண்ட நேரம் தொழவைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நபியவர்கள் அதை விடச் சிறந்த ஒரு நோக்கத்திற்காக தொழுகையில் மாற்றியுள்ளார்கள். எனவே ஒரு ரக்அத் எண்ணத்துடன் தக்பீர் கட்டிய பிறகு மூன்றாகத் தொழுவதில் தவறில்லை.

0 comments:

Post a Comment