22 June 2011

அரபி மொழி செம்மொழியா?

கேள்வி 1 : இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 719, சூரா யூசுஃப் விரிவாக்கத்தில் அரபி மொழி செம்மொழி என்றும் கருத்தை தெளிவு படுத்துவதில் மற்ற மொழிகளைவிட சிறந்த மொழி என்றும் அதனால்தான் இறுதி வேதம் அரபியில் அருளப்பட்டதென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. என்பதைக் குறிப்பிட்டு இதற்கான விளக்கத்தைக் கேட்டிருந்தீர்கள்.

பதில் : நீங்கள் குறிப்பிட்டவாறு இப்னு கஸீர் ஆசிரியர் அவர்கள் எழுதியிருப்பது உண்மைதான். ஆனால் இந்தக் கருத்து திருக்குர்ஆனிற்கும், நபிகள் நாயகத்தின் போதனைக்கும் எதிரானதாகும்.
மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.
ஈஸா (அலை) இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. ஈஸா (அலை) தாய்மொழியில் தான் அருளப்பட்டது. அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்
இதனை பின்வரும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம் (அல்குர்ஆன் 14 : 4)
(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம் (அல்குர்ஆன் 42 : 7)
(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம். (அல்குர்ஆன் 45 : 58)
(முஹம்மதே! நம்மை) அஞ்சுவோருக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும், பிடிவாதம் பிடிக்கும் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்வதற்காகவுமே உமது மொழியில் இதை எளிதாக்கியுள்ளோம். (அல்குர்ஆன் 19 : 97)
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அரபி மொழிதான் தெரியும் என்பதாலேயே திருமறைக்குர்ஆன் அரபி மொழியில் அருளப்பெற்றது. என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. அரபு மொழி தான் தேவமொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.
அரபி மொழியில் இருந்தாலும் , அரபி அல்லாத மொழியில் இருந்தாலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதுதான் திருக்குர்ஆனின் நோக்கமாகும். மொழிக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை. இதனை பின்வரும் வசனத்தின் மூலம் திருக்குர்ஆன் தெளிவு படுத்துகின்றது.
இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே?'' என்று கூறுவார்கள். இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நோய் நிவாரணமுமாகும் என்று கூறுவீராக! நம்பிக்கை கொள்ளாதவர்களின் காதுகளில் அடைப்பு உள்ளது. இது அவர்களுக்குக் குருட்டுத் தனமாகவும் தெரிகிறது. அவர்கள் தொலைவான இடத்தி­ருந்து அழைக்கப்படுகின்றனர். (அல்குர்ஆன் 41 : 44)
இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒரு வழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.
யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.
நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.
ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.
அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும்.
(நூல்: அஹ்மத் 22391)
அரபி மொழி செம்மொழி என்பதினால் திருக்குர்ஆன் அரபியில் அருளப்படவில்லை. மாறாக செம்மையான அரபி மொழியில் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.
அரபி மொழியில் மட்டரகமான நடையில் பலநூல்கள் உள்ளன. திருக்குர்ஆன் அந்த நூல்களைப் போன்று நடைகொண்டதல்ல. மாறாக செம்மையான அரபி மொழி நடையில் அருளப்பட்டதாகும்.
''ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி. (அல்குர்ஆன் 16 : 103)
திருக்குர்ஆனின் மூலம் அரபி மொழிக்கு சிறப்பே தவிர அரபி மொழியினால் திருக்குர்ஆனிற்கு எச்சிறப்புமில்லை என்பதே உண்மையாகும்.

0 comments:

Post a Comment