17 December 2010

நபிவழியும் இறைச் செய்தியே

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.  (வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.  அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். (53 : 3 - 7)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப் படி பேசுவதில்லை.  அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. 

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது.  குர்ஆன் வஹி என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர்.  குர்ஆன் வஹியாக உள்ளது என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை.  ''இவர் மனோ இச்சைப் படி பேச மாட்டார்'' என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும்.  மனோ இச்சைப் படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான். 
குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது. 
உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல்  முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப்பட்டவையல்ல.  மாறாக அது இறைவனால் அறிவிக்கப் பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. 
குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் லி அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16:44)
இவ்வசனத்தில் திருக்குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
முதலாவது வழி, வாசிப்பவர்கள் அவர்களே சிந்தித்து விளங்கிக் கொள்ளுதல்.
இரண்டாவது வழி, யார் வேதத்தைக் கொண்டு வந்தாரோ அந்தத் தூதர் தந்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் விளங்குதல்.
திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்தால் கணிசமான வசனங்கள் எந்த விளக்கமும் தேவைப்படாமல் மேலோட்டமாக வாசிக்கும் போதோ, அல்லது கவனமாகச் சிந்திக்கும் போதோ விளங்கி விடும். ஆனால் சில வசனங்கள் எவ்வளவு தான் சிந்தித்தாலும் நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் சரியாக விளங்காது.
முஹம்மதே! உமக்கு வேதத்தை அளித்தது, நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் தான் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.
திருக்குர்ஆனுடன் நபிகள் நாயகத்தின் விளக்கம் பின்னிப் பிணைந்தது; தவிர்க்க இயலாதது என்பதற்கு வலுவான சான்றாக இவ்வசனம் திகழ்கிறது.
எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன.
இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித் தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.  அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
எங்கள் இறைவா! இவர்களுக்கு உன் வசனங்களை ஓதிக் காட்டி இவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து இவர்களைத் தூய்மை படுத்தக் கூடியவராக இவர்களுக்கு இவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்புவாயாக!  நிச்சயமாக நீ மிகைத்தவன்.  ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 2 : 129)
இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.
''உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்''
''அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்''
என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  வசனங்களை ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் லி வசனங்களை ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.
உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள் அல்லது வேதத்தை அவர்களுக்கு கற்றுத் தருவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள்.  இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல் இரண்டையும் சேர்த்துக் கூறியதிலிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு.  ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை எப்படி ஆதாரமாகக் கொள்ள முடியும்? அல்லாஹ் இவ்வாறு கூறவில்லையே என்று யாரும் நினைத்து விடக்கூடாது.  ஏனெனில் அல்லாஹ்வும் இப்படித் தான் கூறியுள்ளான்.
உங்களுக்கு உங்களிலிருந்தே ஒரு தூதரை நாம் அனுப்பினோம்.  அவர் உங்களுக்கு நமது வசனங்களை ஓதிக் காட்டுவார்.  மேலும் உங்களைத் தூய்மை படுத்துவார்.  உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தருவார்.  மேலும் நீங்கள் அறியாதிருந்தவற்றையும் உங்களுக்குக் கற்றுத் தருவார்.  (அல்குர்ஆன் 2 : 151)
இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டது குறித்து கூறுகின்ற வசனமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும் அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய மக்களுக்கே தூதராக முதலில் அனுப்பப் பட்டார்கள்.  அவர்களுக்கு அருளப்பட்ட வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப் பட்டது.
அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன் பொருள் நிச்சயம் விளங்கி விடும். 
ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்களாம்.
2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்களாம்!
3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்களாம்.
4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்களாம்.
5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்களாம்.
இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது, இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.
வசனங்களை ஓதிக் காட்டியவுடன் பெரும்பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும் நபிகள் நாயகம் விளக்கம் சொன்னபிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன.  அவ்வாறு இருப்பதால் தான் வசனங்களை ஓதிக் காட்டுவார்.  மேலும் வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.
ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருள் விளங்கலாம்.  ஹஜ் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும்.  உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருள் விளங்கலாம்.  அதை எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகிறது.
அவனது வசனங்களை ஓதிக் காட்டி மேலும் அவர்களைத் தூய்மைப் படுத்தி மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அல்லாஹ் மூமின்களுக்கு பேரருள் புரிந்து விட்டான் (3 : 164)
வெறும் வேதத்தை மட்டும் அருளியதை அருட்கொடையாக அல்லாஹ் கூறவில்லை.  மாறாக தூதரை அனுப்பியது தான் அருட் கொடை என்கிறான்.  அதுவும் அந்தத் தூதர் வேதத்தை வாசித்துக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு விளக்கம் கூறும் அதிகாரமும் பெற்றவராக இருப்பதையும் கூறி விட்டு இதைத் தனது அருட்கொடை என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
இதே போன்று ஜும்ஆ அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாசித்துக் காட்டிய குர்ஆன் எங்கே என்றால் இதோ என்று கூறி விடுவோம்.  அந்த வேதத்துக்கு விளக்கம் அளித்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே அந்த விளக்கம் எங்கே? அறியாதவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறானே அவையெல்லாம் எங்கே?
இறைவன் அந்தப் பணிகளைச் செய்வதற்காகவே அனுப்பியுள்ளான் என்பதிலிருந்து அவர்களின் விளக்கம் இன்றியமையாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அந்த இன்றி அமையாத விளக்கம் எங்கே? குர்ஆன் மட்டும் போதும் என்போர் அதை ஒருக்காலும் எடுத்துக் காட்ட முடியாது.
வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் வசனங்களை ஓதிக் காட்டுவதும் ஹிக்மத்தைக் கற்றுக் கொடுப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்று உளறுவதைத் தவிர அவர்களிடம் இதற்கு பதில் கிடையாது.
அல்லாஹ் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன் படுத்தியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்தாவது தங்கள் மனோ இச்சையை நிலை நாட்டப் பார்க்கிறார்கள்.
பயனற்ற தேவையற்ற ஒரே ஒரு சொல்லும் அல்லாஹ்வின் வேதத்தில் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வேதத்தை ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை வெறுமனே வாசித்துக் காட்ட மட்டும் வரவில்லை.  வாசித்துக் காட்டும் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும் நடைமுறைப்படுத்திக் காட்டும் அதிகாரம் பெற்றவர்களாகவுமே வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குர்ஆனை மட்டும் வைத்து குர்ஆனை விளங்க முடியாது. மாறாக இறைத்தூதரின் விளக்கமும் அவசியம் என்பதை திருமறைக்குர்ஆன் தெளிவாக பிரகடனப் படுத்துகிறது.

0 comments:

Post a Comment