21 March 2023

இரவுத் தொழுகையில் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்கும் மத்தியில் திக்ர், தஸ்பீஹ் செய்வது நபிவழியா?

பதில் : 

இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. இவையெல்லாம் மார்க்கத்தில் நுழைவிக்கப்பட்ட பித்அத் ஆகும்.



செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).

நூல்: நஸாயீ 1578.

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

"நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக் கப்பட்டதாகும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 3541

 (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்தான) காரியங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் பித்அத். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி)

நூல்: அஹ்மத் 17184

குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றக் கூடியவர்களுக்கு இதுவே போதுமானதாகும். ஆனால் மத்ஹபைப் பின்பற்றுவதாக கூறுபவர்கள் தங்களது இமாம்கள் கூறினால்தான் ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். அவர்களுக்காக மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களின் கூற்றுகளை கீழே தருகிறோம்.


மாலிக் மத்ஹபைச் சார்ந்த அறிஞர் இப்னுல் ஹாஜ் அவர்களின் ஃபத்வா

المدخل لابن الحاج (2/ 293)

(فَصْلٌ فِي الذِّكْرِ بَعْدَ التَّسْلِيمَتَيْنِ مِنْ صَلَاةِ التَّرَاوِيحِ)ِ وَيَنْبَغِي لَهُ أَنْ يَتَجَنَّبَ مَا أَحْدَثُوهُ مِنْ الذِّكْرِ بَعْدَ كُلِّ تَسْلِيمَتَيْنِ مِنْ صَلَاةِ التَّرَاوِيحِ  وَمِنْ رَفْعِ أَصْوَاتِهِمْ بِذَلِكَ وَالْمَشْيِ عَلَى صَوْتٍ وَاحِدٍ فَإِنَّ ذَلِكَ كُلَّهُ مِنْ الْبِدَعِ

தராவீஹ் தொழுகையில் ஒவ்வொரு இரண்டு ஸலாமிற்குப் பிறகு திக்ர் செய்வதைப் பற்றிய விளக்கம்

தராவீஹ் தொழுகையில் ஒவ்வொரு இரண்டு ஸலாமிற்குப் பிறகும் திக்ர் என்று அவர்கள் எதைப் புதிதாக (மார்க்கமாக) உருவாக்கியுள்ளார்களோ அதைத் தவிரந்து கொள்வது அவசியமானதாகம். அவற்றைக் கொண்டு அவர்கள் தமது சப்தங்களை உயர்த்துவதையும், ஒரே குரலாக ஓதுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இவை அனைத்துமே பித்அத் ஆகும்.

(நூல் : அல்மத்ஹல் லிஇப்னில் ஹாஜ் பாகம் 2 பக்கம் 293)


ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர் இப்னு ஹஜர் அல் ஹைஸமி அவர்களின் ஃபத்வா

الفتاوى الفقهية الكبرى (1/ 186)

 وَسُئِلَ فَسَّحَ اللَّهُ في مُدَّتِهِ هل تُسَنُّ الصَّلَاةُ عليه صلى اللَّهُ عليه وسلم بين تَسْلِيمَاتِ التَّرَاوِيحِ أو هِيَ بِدْعَةٌ يُنْهَى عنها فَأَجَابَ بِقَوْلِهِ الصَّلَاةُ في هذا الْمَحَلِّ بِخُصُوصِهِ  لم نَرَ شيئا في السُّنَّةِ وَلَا في كَلَامِ أَصْحَابِنَا فَهِيَ بِدْعَةٌ يُنْهَى عنها من يَأْتِي بها بِقَصْدِ كَوْنِهَا سُنَّةً في هذا الْمَحَلِّ بِخُصُوصِهِ

தராவீஹ் தொழுகையில் ஒவ்வொரு ஸலாத்திற்கும் மத்தியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதுவது சுன்னத்தாக்கப்பட்டுள்ளதா? அல்லது அது தடைசெய்யப்பட வேண்டிய பித்அத்தா?
இதற்கு (இமாம் இப்னு ஹஜர் ஹைஸமீ) பின்வருமாறு பதிலளித்தார் :

குறிப்பாக இந்த இடத்தில் ஸலவாத் சொல்ல வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. நம்(முடைய மத்ஹபைச்) சார்ந்தவர்களின் பேச்சிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது ஒரு பித்அத் ஆகும்.  குறிப்பாக இந்த இடத்தில் ஸலவாத் சொல்வது சுன்னத் ஆகும் என்ற நோக்கத்தில் யார் அதைச் செய்கிறாரோ அவர் அதை விட்டும் தடுக்கப்பட வேண்டும்.


(அல்ஃபதாவா அல்ஃபிக்ஹியத்துல் குப்ரா பாகம் 1, பக்கம் 186)

0 comments:

Post a Comment